புதன், 10 அக்டோபர், 2012

மனம் என்னும் மாயப் பிசாசு (பகுதி-1)



மனம் என்னும் மாயப் பிசாசு (பகுதி-1)

இந்த உலகில் ஒவ்வொருவரையும்
மனம் என்னும் மாய பிசாசு தன்
கையில் பிடித்து வைத்துக்கொண்டு
அவன் உலகில் விழித்திருக்கும் நேரத்திலும்
 அவன் உறங்கும்போது கனவிலும்
அவனை பாடாய் படுத்திகொண்டிருக்கிறது

உலகில் மனிதர்கள் தங்களை
எது ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறது என்று புரியாமல்
குரங்காட்டியிடம் அகப்பட்ட குரங்கு போல்
அவன் கையில் பிரம்பு ஆடுகிறபடி
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்

இந்த மனம் நண்பர்களை திடீரென்று
பகைவர்களாக எண்ணிவிடும் .
அடுத்த கணம் பகைவர்களை
நண்பர்களாக நினைக்கும் .

ஒன்றை பிடித்துகொண்டுவிட்டால்
குரங்கு பிடிபோல் பிடித்துகொண்டு விடாது
அது எப்படி என்றால் ஒரு குரங்கு தன்
முன் படமெடுத்து நின்ற பாம்பை
பயந்துபோய் கையால் பிடித்து விடும்.
கையை விட்டால் பாம்பு கடித்துவிடும்.
அதனால் தன் உயிர் போய்விடும்
என்றும் அதற்கு தெரியும்
அதனால் அது அந்த பாம்பை கீழே போடாது .

பாம்பை குரங்கு பிடித்த வேகத்தில்
 பாம்பு இறந்துபோயிருக்கும்.
ஆனால் அது குரங்கிற்கு தெரியாது.
அந்த பாம்பு அழுகி காய்ந்து உலர்ந்து போயிருக்கும்
குரங்கும் பயத்திலேயே காய்ந்து போன
பாம்பை கையில் பிடித்துக்கொண்டே இறந்துபோய்விடும்.

அதைப்போல்தான் மனிதர்களும்
 தங்கள் எண்ணங்களுடனே இறந்துவிடுகிறார்கள்.
அவர்களது உடல்தான் அழிகிறதே தவிர
அவர்களின் எண்ணங்கள் அழிவதில்லை.

மீண்டும் பிறக்கும்போது ஏற்க்கெனவே
மனத்தில் உள்ள பழைய எண்ணங்களுடன்
புதிய பிறவியில் சேரும் எண்ணங்களும்
சேர்ந்து கொண்டு அவர்களை ஆட்டி வைக்கின்றன

அதைபோல்தான் மனம் ஒன்றை
பற்றிக்கொண்டால் அதை விடவே விடாது.
இதைப்போல் மனம் கோடிக்கணக்கான விஷயங்களை பற்றிக்கொண்டிருக்கிறது. .

அவைகள் அனைத்தும் நம் மனதில்
எண்ணங்களின் பதிவாக நிரந்தரமாக பதிவாகியுள்ளன.

அவைகளை நீக்குவது கடினம்.
மனம் தன் புலன்கள் மூலம் ஒவ்வொரு கணமும்
புதிய காட்சிகளை,புதிய செய்திகளை
பதிவு செய்துகொண்டே இருக்கிறது.

அடிக்கடி பார்க்கும் செய்திகளோ,
காட்சிகளோ நம்மிடம் செயல் வடிவம் பெறுகின்றன

செயல்கள் நம்மை இன்பத்திலும் ஆழ்த்தும்
அல்லது துன்பத்திலும் ஆழ்த்தும்.

பலவித உணர்சிகளை தூண்டியும்,
மனம் தன் மாய வலையை விரித்துக்கொண்டே இருக்கிறது.

நாம் அதன் வலையில் வீழ்ந்து
வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு கொண்டிருக்கிறோம்.

மனதை அடக்கமுடியுமா என்று
பல கோடி பேர்கள் முயன்று தோற்று மடிந்து போனார்கள்

சிலர் முயற்சி செய்து அதை அடக்க
பல வழிகளை கண்டு பிடித்தார்கள்

ஆனால் சில காலம் அவர்களுக்கு கட்டுப்பட்டதுபோல்
போக்கு காட்டி விட்டு மீண்டும் அது மனிதர்களை தனக்கு அடிமையாக்கிவிட்டது.

இதுபோன்ற மனதில் செயல்பாடுகளையும்,
அது மனிதர்களை எவ்வாறெல்லாம் ஆட்டி வைக்கிறது,
அதிலிருந்து யோகிகளும், ரிஷிகளும் எவ்வாறு
போராடி மனதை ஜெயிக்க முற்ப்பட்டனர்
என்பதைத்தான் ஏராளமான காவியங்களும்
புராணங்களும் கதைகளும்
நமக்கு விவரிக்கின்றன.

வைக்கோல் போரில் தொலைத்துவிட்ட
ஊசியை தேடுவதுபோல் காவியங்களில்
 நாம் தொலைத்துவிட்ட நிம்மதியை தேடவேண்டும்.

மாடைப்போல் வெறும் வைக்கோலை
மட்டும் தின்றுவிட்டு சாணியை
போடுவதுபோல் இருக்கக்கூடாது. (இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக