ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

காந்தி ஜெயந்தி


காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி
ஆண்டுதோறும் அக்டோபர்  2-ம் நாள்
 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை 
 காந்தி ஜெயந்தியாக கொண்டாடுவார்கள்
அவரின் படத்திற்கும் சிலைகளுக்கும்
பக்தி சிரத்தையுடன்  மலர்கள் தூவி 
மாலைகள் சார்த்தி நேர்மைக்கு பெயர் போன 
மகாத்மா காந்திக்கு நேர்மையற்ற வழியில் ஊர் பணத்தை
கொள்ளையடித்து ஊர் மெச்ச விழா கொண்டாடுகிறார்கள்
ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள்
எல்லோரையும் கதர் கட்ட செய்து
நெசவாளர்களுக்கு மறு வாழ்வு அளித்தார் காந்தி அன்று
கதர் வாரியங்களை மூடிவிட்டு வெளிநாட்டு
துணிகளை தாராளமாக விற்க அனுமதித்து
இங்குள்ள பரம ஏழை நெசவாளர்களின் வாழ்வை
அழித்துவிட்டனர் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இன்று
காந்தி குல்லா அணிந்து இன்றொருநாள் மட்டும்
வேஷம் கட்டுகிறார்கள் கோடிகணக்கான நெசவாளர்களின்
வாழ்க்கையை அழித்துவிட்டு அவர்களை
தற்கொலை செய்ய விட்டுவிட்டு
அவர்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்திய
காந்தி மகான் பிறந்த நாளை கொண்டாடுகிறார்களே ,
யாரை ஏமாற்றுவதற்க்காக.?
கள்ளை ஒழிக்க வாழ்நாள் முழுவதும்
போராடிய காந்தி எங்கே ?
பட்டி தொட்டி எலலாம் அரசு செலவிலே
மதுக்கடைகள் திறந்து நாட்டு மக்களின் வாழ்வை
நாசமாக்கும் தற்போதைய அரசியல்வாதிகள் எங்கே ?
ராம ராஜ்ஜியம் வர வேண்டும் என்று விரும்பினார் காந்தி 
அரசியல்வாதிகளே ஆனால் நீங்கள் ஊழல் சாம்ராஜ்யத்தை
நிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டீர்கள் 
உண்மைக்கும் ,நேர்மைக்கும்
சின்னமாய் விளங்கும் காந்தி மகான்
படம் போட்ட ருபாய் நோட்டை
சாட்சி வைத்தே லஞ்சம் வாங்கி ஊழல் செய்து
மாறி மாறி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில்
ஏறி இறங்கும் இவர்கள் காந்தி பிறந்த நாள் விழா
கொண்டாட அருகதை உண்டா ?
இரண்டு கதர் துணிகளுடன்
எளிமையாக வாழ்ந்த அந்த மகான் எங்கே ?
கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள
சொத்துக்களுடனும்வெளி நாட்டு வங்கிகளில்
கோடிக்கணக்கில் பணம் போட்டு விட்டு
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில்
பத்து காவலர்கள் நவீன பாதுகாப்பு ஆயுதங்களுடன்
புடை சூழ பவனி வந்து நொடிக்கொரு தரம் 
பொய்களை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி
கொழுக்கும் தற்கால அரசியல்வாதிகள் எங்கே ?
ஏற்கெனவே காந்தியின் அனைத்து கொள்கைகளுக்கு
சமாதி கட்டியாகிவிட்டது 
கிராம பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிட்டது
சிறுதொழில்கள் சிறுமைபடுத்தப்பட்டுவிட்டன
சுதேசிகள் பரதேசிகளாகிவிட்டார்கள்
இன்னும் எதற்கு நீங்கள் தேசப்பிதாவிர்க்கு விழா எடுக்க வேண்டும் ?
காந்தியின் கொள்கைகளை நம்மை விட
மேலை நாட்டினர் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்
மார்டின் லூதர் கிங்கும் , நெல்சன் மண்டேல்லாவுமே இதற்க்கு சான்று
நம் நாட்டு மக்களுக்கு மேலை நாட்டை
சேர்ந்தவன் படம் எடுத்து காந்தியை பற்றி
புரியவைக்க வேண்டியிருக்கிறது .என்ன கொடுமை ?
அது சரி காந்தி யார் என்று கேட்கிறீர்களா?
ருபாய் நோட்டில் ஒரு படம் அச்சிடபட்டிருக்கும் 



அவர்தான் காந்தி.


4 கருத்துகள்:

  1. காந்தி குல்லா அணிந்து இன்றொருநாள் மட்டும்
    வேஷம் கட்டுகிறார்கள்
    நன்றி. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு
    காந்தி படம் போட்ட
    நோட்டுக்கள் முதல்நாளே
    மதுக்கடைகளுக்கு சென்று விடுகின்றன

    பாவம் காந்திமகான்
    குடியை கெடுக்கும் குடியை
    ஒழிக்க வாழ்நாளெல்லாம் போராடிய
    அந்த மகானின் உழைப்பு
    விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

    மது தயாரிப்போர் கோடிக்கணக்கில்
    வருவாயில் கொழுக்க
    அப்பாவி மக்கள் குடியினால்
    தங்கள் வயிற்றில்
    குடலும்,ஈரலும் அழுகி
    உயிருக்கு போராடும் காட்சிகள்
    மருத்துவ மனைகளில் இன்று அதிகம்.

    மதுக்கடைகள் இன்று
    பல ஆயிரம் பேருக்கு
    பிழைப்பை தருகிறது என்றாலும்
    பல கோடிபேர்களின் வாழ்வு
    சூன்யமாக போய்விட்டது
    என்பதை யாரும் உணரவில்லை.

    நன்றாகஉடை அணிந்து அரசு
    மதுக்கடைகளில் குடித்துவிட்டு
    பொது இடங்களில் விழுந்து கிடக்கும் அவலம்
    கண்டும் மக்கள் கண்டும் காணாது சென்று கொண்டிருப்பது
    இன்றைய கலாசாரம்.

    இளமையில் கல் என்பது பழமொழி
    இன்றோ இளமையிலேயே கிட்னியில் கல்,
    பித்தப்பையில் கல்,
    மூத்திர பையில் கல் என்று
    மனம் கல்லாய் போன மனித சமூகம்
    துன்பத்தில் தவிக்கிறது.

    என்ன செய்வது?

    யார் என்ன சொன்னாலும் கேட்கின்ற
    மனநிலையில் இல்லை

    அதனால்தான் பாரதி பாடிய கவிதை வரி-
    நடைமுறைக்கு வந்துவிட்டது
    அதுதான்

    சொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல்
    கண்டும் சிந்தை இரங்காரடி.

    எப்படியாவது போகட்டும்
    என்று விட்டு விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. தேசத்தந்தையை நினைவு கூர்ந்து தேசத்தின் இன்றைய நிலையை விளக்கிய அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி .
    எதிர்காலத்தில் நல்லவைகள் நிகழ
    இறைவனை பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு