திங்கள், 24 செப்டம்பர், 2012

கடமைகளும் கவலைகளும்


கடமைகளும் கவலைகளும்   ?

கடமைகள்  என்னை  கட்டிப்போட்டன 
கவலைகள்  என்னை  அரித்து  தின்றன 

வினைப்பயனால்   வந்ததிவ்வுடல் 
வினைகளை எல்லாம் 
அனுபவித்து  தீர்க்கத்தான்  ;
;
மனமும்  உடலும்  மாறி  மாறி 
வருத்துவதேனோ ?
;
உடலில் நோய் என்ற நிலை மாறி 
உடலே நோயாகி விட்ட அவலம் ஏன் ?

விதிவசத்தால்  வாழ்வில்  வேண்டாத  நிகழ்வுகள் 
ஊமைக்காயங்கள் , எள்ளி  நகையாடும்  உறவுகள் 
வேடிக்கை  பார்க்கும்  சுற்றங்கள் 
இதுதான்  உலக  இயற்கையோ ?

பதவியில்  இருந்தபோது  சுற்றி   நின்று 
பல்லை  இளித்த   கூட்டம் 
சொல்லை  மதித்த  கூட்டம் 
பதவிபோனபின் பஞ்சாய் பறந்து 
போன   மாயம்  என்னவோ ?
;
வாழ்க்கை  பயணத்தில்  காலடி  சுவடுகள் 
உள்ளத்தில்  இன்றும்  ரணம்  ஆறாத   வடுக்கள் 
மறக்க  நினைத்தாலும் கனவுகளாக வந்து  
உரக்க  கூச்சல்  போடுகின்றன  
இரவு  நேர  உறக்கத்தில் 
பிறர்  காதுகளுக்கு  கேட்காவண்ணம் 
இதுதான்  வாழ்க்கையோ ? 

குறையொன்றுமில்லை  மறைமூர்த்தி  கண்ணா 
என்று  வாய்  உரக்க   பாடும்  
மனம்  முழுதும் 
நிரம்பி வழியும்  குறைகளுடன் 

குழாயை  திருப்பினால்தான்  தண்ணீர்  வரும் 
நினைவுகளோ  நெஞ்சில்  தோன்றியவுடனே 
கண்களில்  நீரை வரவழைக்கும் மாயம் என்னவோ? 

எல்லாம்  இருந்தும்  நிறை  காணாத  மனம் 
இல்லாததை  மட்டும்  நினைத்து  நினைத்து 
எதிலெதிலோ தேடி அலையுது தினம் ;

தத்துவம்  நன்றாக  உள்ளது  படிக்க  மட்டும் 
கடினமாகவோ  உள்ளது  கடைபிடிக்க மட்டும்
அது ஏன் புரியவில்லை?
தத்துவம் புரியாதது தான் காரணமோ? 

மனம்  இருந்தால்  வழியுண்டு  என்றார்கள் 
மனம் இறந்தால் இன்பமுண்டு என்கிறார்கள் ஞானிகள்
ஆனால்  அது உறங்கும்போது மட்டும் காணாமல் 
போகும் மாயம் என்னவோ? 
கண் விழித்தவுடன் மட்டும்
மீண்டும் தோன்றும் ரகசியம்தான்  என்னவோ? 

உலகத்தில்  அமைதி  இல்லை   என்கிறார்கள் 
உள்ளத்தில்  அமைதி  இருந்தாலல்லவோ 
நாம்  காணுகின்ற  உலகிலும்  அமைதி  நிலவும் 
என்று  அறிவதெப்போது ?

கடலில்   அடுத்தடுத்து  ஆர்பரித்து 
வரும்  அலைகள்போல
நம்மை அங்குமிங்கும்  அலைகழிக்கும் 
ஓயாது  தோன்றும்  எண்ண  அலைகள் 


புலன்களுக்குஅப்பால்  மறைபொருளாய்  நின்றுகொண்டு 
அனைத்தையும்  படைத்து , காத்து , அழித்து 
நம்  கண்ணை  மறைக்கும்  அந்த  பரம்பொருளை 
உணராது  கண்  முன்னே  பரந்து 
பரவி  கிடக்கும்  பொருளைஎல்லாம் 
தனதென்று  எண்ணி  மாயையில்  
உழல்வதால்தானோ  இந்த  பெருங்குழப்பம் ?

நம்மை  உள்ளிருந்து  இயக்குபவனை  உணராது 
அகந்தை  கொண்டு  நாமேதான்  அனைத்தையும் 
ஆளுகிறோம்  என்ற  எண்ணத்திற்கு  ஆட்பட்ட தாலன்ரோ 
இத்தனை  துன்பங்களும்  வேதனைகளும்  ?

அகந்தை  எடுக்கும்  கணக்கற்ற  வடிவங்கள் 
அதை  உணர  இயலா  மானிட  இனம் 
அதனால்  படும்  துன்பம்  அனுதினம் 
மதி  மயங்கி  மனம்  கூறுவதே  உண்மை 
என  நம்பும் , உண்மையறியாது  தடுமாறும் 

விழியிருந்தும்  வழியறியாது 
பழி  சுமந்து  பொய்கதைகள்  பேசி 
பொழுதை கழிக்கும்  மானிட  கூட்டம் 
மரணத்தை  கண்டால் மட்டும் 
அஞ்சி நடுங்குதுவது ஏன்?

சாத்திரங்கள்  பல  கோடி   
கடவுள்கள்  பல  கோடி  
உண்மையறியாது 
பிதற்றுபவர்கள்  பல  கோடி 
நம்மை  குழப்பி  திரிவார்கள் 
பலர்  நம்மை நாடி 


ஒன்றே  பரம்பொருள்  ,ஓயும் வரை,ஓயாமல்  
அவனை  நினைந்து  வணங்கி வந்தால்   போதும் 
அவனோடு ஒன்றிப்போகலாம் 
இன்பமாய்  வாழலாம்  என்ற  நினைவுடனே  
காரியங்கள்  ஆற்றினால்  போதும்  
அவனியில்  வாழ்வு ஆனந்தமாகும் 

5 கருத்துகள்:

  1. அருமையான கேள்விகளும் அதற்கான தங்களின் பதில்களும்...
    நன்றாக இருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பிடித்தது :

    /// சாத்திரங்கள் பல கோடி...
    கடவுள்கள் பல கோடி...
    உண்மையறியாது...
    பிதற்றுபவர்கள் பல கோடி...
    நம்மை குழப்பி திரிவார்கள்...
    பலர் நம்மை நாடி...///

    வாழ்த்துக்கள்... நன்றி சார்...

    பதிலளிநீக்கு