திங்கள், 17 செப்டம்பர், 2018

மனமே உன்னைப்போல் உற்ற துணை இவ்வுலகில் யாரேனும் உண்டோ?

மனமே உன்னைப்போல் உற்ற துணை 
இவ்வுலகில் யாரேனும் உண்டோ?

மனமே உன்னைப்போல்
உற்ற துணை இவ்வுலகில்
யாரேனும் உண்டோ என்றால்
அது  பொய்யாகுமோ ?

எல்லையில்லா வானம்போல்
எண்ணற்ற தகவல்களை உன்னுள்ளே
அழியாமல் சேமித்து வைத்து
வேண்டுவோர்க்கு வேண்டும் நேரத்தில்
அளித்து உதவிடும் உன் திறமையை
என்னவென்று புகழ்வது?

ஆயிரமாயிரம் எண்ணங்கள் வற்றாத
ஜீவநதிபோல் என் முன்னே
ஓடிக்கொண்டிருந்தாலும்
எனக்கு தேவையானஒன்று
அதில் தெரிந்தால்
அதை அழைத்தால்
உடனே ஓடி வந்து
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
உன் செயலுக்கு ஈடு இணை
உண்டோ இவ்வுலகில்?

என்றோ நடந்து முடிந்து
காலத்தால் கடந்துபோன இன்பம்
தந்த அந்த நிகழ்வை
அப்படியே மாறாமல் பதிவு செய்து
அதை நினைக்கும்போது கண  நேரத்தில்
கண்முன்னே தோற்றுவித்து
மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உன்
பாங்கு சொல்லால்
வடிக்க இயலுமோ?

உன்னுடன் உனக்கு துணையாய்
ஓய்வின்றி உழைக்கும் ஐம்புலன்களின்
சேவையை பாராட்ட மனமில்லாத
சோம்பேறிகள் அவர்களை
ஐம்புலக் கள்வர்கள் என்று விமரிசிப்பதை
கண்டு கொள்ளாமல்
என் கடன் பணி 
செய்து கிடப்பதே என்று கீதையில்
கண்ணன்  காட்டிய வழியில் நீங்கள்
செல்லுவது நான் கற்றுக்கொள்ள
வேண்டிய முக்கிய பாடம்.




2 கருத்துகள்:

  1. நம் மனமே நமக்கு சில சமயங்களில் நண்பனாகவும், சில சமயங்களில் ஆசிரியராகவும், வெகு சில சமயங்களில் எதிரியாகவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு