புதன், 28 ஆகஸ்ட், 2013

கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளை தேடி அலைகின்றார்

கருணை  மறந்தே  வாழ்கின்றார்
கடவுளை தேடி அலைகின்றார் 

மனிதர்கள் மற்றவர்களிடம்
கருணை காட்டுவதேயில்லை

ஆனாலும் அவர்கள் குற்றம்
புரிந்துவிட்டால்மட்டும்
அவர்களிடம்  மற்றவர்கள்
கருணை காட்டவேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்கள்.

அதே சமயத்தில் யாராவது அவர்களிடம்
 "நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்"
என்று மன்றாடினால் அந்த கோரிக்கையை
அவர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை.

மாறாக மன்னிப்பு என்பது
என் அகராதியிலேயே இல்லை.
எங்கள் பரம்பரையிலும்
அந்த வழக்கம் கிடையாது
என்று ஈவிரக்கமின்றி பேசுகிறார்கள்

அவர்கள் செய்த தவற்றிற்கு
ஒரு நீதிமன்றம் தண்டனை அளித்தால்
அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

தங்களுக்குசெல்வாக்கு, பணம்
ஆகியவற்றைக் கொண்டு மேல் நீதிமன்றத்தில்
முறையீடு செய்துகொண்டே வாழ்நாளை
கழிப்பதுடன் அனைத்தையும் இழந்து
நடுத் தெருவில் நிற்ப்பவர்களும்  உண்டு.

 எல்லா நிலையிலும் அவர்கள் கோரிக்கை
நிராகரிக்கப்பட்டு தண்டனையை
அனுபவிப்பவர்களும்  உண்டு.

இன்று பெரும்பாலான மனிதர்கள்
தங்கள் வீட்டில் வளர்க்கும் வாயில்லா
ஜீவன் நாய்க்கு ராஜ  உபசாரம் செய்வார்கள்.

ஆனால் அதே போன்று வாயில்லா பிராணிகளான
 ஆடு, மாடு, கோழி, பறவைகள், கடல் வாழ் ஜந்துக்கள்
ஆகியவற்றின் மீது துளி கூட இரக்கம்  காட்டுவதில்லை

அவைகளை கொன்றோ அல்லது
உயிருடன் பிடித்தோ
வயிற்றுக்குள்  தள்ளுகிறார்கள்.

அவைகளை அவர்கள் உயிராக
கருதும் பண்பு இல்லை.
மாறாக அவைகள் தங்கள்
வயிற்றுக்குள் உணவாக கொள்வதற்காகவே
படைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்
ஒருநாள் மண்ணின் வயிற்றுக்குள்
போகப்போகும் இவர்கள்.

பிற உயிர்கள் மீது ,
சக மனிதர்கள் மீது இரக்கம்  இல்லாதவர்கள்.
தங்கள் மீது மட்டும் சக மனிதர்களோ
அல்லது கண்ணுக்கு தெரியாத இறைவனோ
இரக்கம்  காட்டுவார்கள் என்று
எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக