வியாழன், 25 டிசம்பர், 2014

மதம் நுழையாத இடம் எது?

மதம் நுழையாத இடம் எது?

இந்த உலகில் பிறக்கும்
முன் மதம் இல்லை.

ஒரு உயிர் மண்ணில் விழுந்தவுடன் அதை
கையில் எடுப்பவனால் மத சாயம் , பூசப்படுகிறது.

அந்த உயிர் மீண்டும் மண்ணுக்குள் போகும்வரை
அந்த சாயம் போவதில்லை.

ஆனால் மதம் நுழையாத சில தருணங்களும்
இருக்கத்தான் செய்கின்றன.

ஒருவன் பல நாள் பட்டினி  கிடந்து
நினைவு தப்பும் வேளையில் ஒருவன்
அவன் உயிரைக் காக்க உணவு அளிக்கும்போது
மதத்தை பற்றி சிந்திபதில்லை.

ஒருவன் கொடிய நோயினால் துன்பப்படும்போது ஒரு
மருத்துவரிடம் செல்லும்போது அவர் எந்த மதம், எந்த ஜாதி என்று பார்ப்பதில்லை.

தன்  நோய் குணமானால் போதும் என்று மட்டுமே என்னும் அந்த நேரத்தில்
அவரை மருத்துவராகவே மட்டும் அந்த நேரத்தில் அனைவரும் பார்க்கின்றனர்.

அதுபோல் அந்த மருத்துவரும் வருபவரை 
ஒரு நோயாளியாக மட்டுமே பார்க்கின்றார்

உண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை.

இறைவனும் அப்படித்தான் அனைத்து
உயிர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறக்கும்முன்பே தாயின் மூலம் பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமன் அமிர்தமான பாலை தயாராக வைத்திருக்கிறான்

ஆனால் உணவை உண்டு உடலில் சக்தி வந்தபின் அவனிடம் கர்வமும், தலை தூக்கி விடுவதால், தான் என்ற ஆணவமும், சுயநலமும் மிகுந்து சக உயிர்களிடம் பேதம் கண்டு தீமைகளை செய்கின்றான்.

இறைவன் பல இயற்க்கை இடர்பாடுகள், நோய்கள், அழிவுகள், ஏமாற்றங்கள் இழப்புகள் என எச்சரிக்கைகளை அளித்தும் மனிதர்கள் மனம் திருந்துவதில்லை.

தில்லை நாதனை சிந்தை  செய்வதில்லை. திருவேங்கடனாதனை வணங்குவதில்லை திமிர் பிடித்து அழிகிறார்கள்.

மகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்.

அதை விடுத்து அதை பிறர் மீது திணித்தால்
அழிவைத்தான் சந்திக்க வேண்டி நேரிடும்.

அதைதான் இன்று உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது.




புதன், 24 டிசம்பர், 2014

அன்பு நெறி தழைத்தோங்கும் நாள் என்று வருமோ இவ்வுலகில்?

 அன்பு நெறி தழைத்தோங்கும் நாள் என்று வருமோ இவ்வுலகில்? 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றார் கணியன் பூங்குன்றனார்

அனால் அவர் வழி வந்த தமிழ் சமுதாயமோ
ஜாதியால் பிளவுபட்டு அப்பிளவில்
அரசியல் பேசும் அட்டைகள் பல்கிப் பெருகி
அருமைத் தமிழ்நாட்டை
அரித்து தின்னுக் கொண்டிருக்கின்றன

ஒரு புறம் ஜாதி வேண்டாம் என்கிறார்
மறுபுறமோ ஜாதிவாரி கணக்கெடுப்பு
எடுக்க வேண்டுமென்கிறார்
சாதிக்குசான்று வேண்டும் என்கிறார்,
அதற்க்கு இட ஒதுக்கீடு கேட்டு நாள்தோறும்
போராடுகின்றார்.

எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள்
என்று வாய் கிழிய மேடைதோறும் முழங்குகின்றார்
ஆனால் செய்வவதனைத்தும் ஜாதியின் அடிப்படையிலே
தீர்மானிக்கின்றார்.

சமதர்ம சமுதாயம் வேண்டுமென்றால்
அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி
வாய்ப்பு அளித்தல்தான்  முறையன்றோ !

இதில் மதம் என்றும், கீழ் சாதி என்றும், உயர் சாதி என்றும்
சிறுபான்மை என்று எதற்க்காக வகைப் படுத்து கின்றாரரோ
யாருமறியார்

எல்லோரும் சகோதரர்கள் என்று சொல்கிறது ஒரு மதம்
ஆனால் அவர் மதத்தை சேர்ந்தவர்களையே கொன்று
குவிக்கிறது தினம் ஒரு கூட்டம்

எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்கிறது ஒரு மதம் ஆனால் அவர்களுக்குள்ளே எண்ணற்ற பிரிவுகள்.

எல்லோரும் இறைவனின் அம்சங்கள் என்று கூப்பாடு
போடுகிறது ஒரு மதம் ஆனால் அம்மம்மா எத்தனை பிரிவினைகள்
அந்த மதத்தில்.

அஹிம்சையை போதிக்கும் மதமொன்று அதை சார்ந்த அனைவரும்
மனித உயிர்கள் உட்பட மற்ற உயிர்களை கொன்று குவிக்கின்றனர்
காலம் காலமாய்.

எல்லா உயிரும் இன்புற்று வாழுக கொல்லா விரதம் குவலயமெல்லாம்
ஓங்குக என்ற அன்பு நெறியைப் போதிக்கும் வள்ளலாரின் கூக்குரல்
காற்றில் கலந்து மக்களின் மனங்களில் புகுந்து இந்த உலகம் இன்புறும் அந்த நாள் வருவது எந்நாளோ?

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை காட்டும் ஒளிப் பாதை

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை காட்டும் ஒளிப் பாதை




இதயத்தில் அறியாமை என்னும்
இருள் சூழ்ந்துவிட்டால்
இறைவன் என்னும் விளக்கு
அணைந்துவிடும்

உதயத்தில் ஞாயிறு
உதித்தாலும் உறங்கித்தான்
கிடப்பர் சோம்பி திரியும்
வழியைத்தான் நாடும்
மனம் கொண்டோர்.

அரங்கனுடன் கலந்துவிட்ட
ஆண்டாள் நாச்சியார்
நம் அறியாமையைப் போக்கிடவே
பரிமுகனாம் ஹரி என்னும்
ஒளியை நாடும் வழிசொன்னாள்

உறக்கத்தை விட்டொழித்து
உவராழியிளிருந்து உலகிற்கு வந்து
உயரிய தர்மத்தை போதித்த
உடுப்பி கண்ணனை ,
உலகளந்த உததமனை
உள்ளத்தில் கள்ளம் தவிர்த்து
உள்ளம் என்னும் கோயிலில் அவனை
நிறுத்தும் முகமாக கோயிலில் சிலையாய்
நிற்கும் அவன் முன்பு சென்று அவன்
புகழ் பாட அழைக்கின்றாள்.தன் அந்தப்புரத்தை
விட்டு வெளியே  வருகிறாள் ஆண்டுதோறும்

ஹரி என்னும் தெய்வத்தை
அறிவதற்குத்தான் மனித உயிர்களுக்கு
அறிவைக் கொடுத்தது அந்த பரம்பொருள்.

ஆனால் பொருள் தேடுவதற்கும்
பிறர் அந்தரங்கம் அறிவதற்கும் மட்டுமே அறிவை அடைந்து
ஆயுள்  முழுவதும் அலைந்து ஓய்ந்து  வீணே மடிந்து
போகிறது மனிதர் கூட்டம்

தனக்குள்ளே குடி  கொண்ட தெய்வத்தை தேடாமல்
காட்டிலும் ,மேட்டிலும், காவி உடை உடுத்திய பல்
போலிகளிடம் சென்று தேடுகிறது காலமெல்லாம்.

உண்மைதான் தெய்வம் என்பதை அறிந்து
உண்மை பேசாமல் பொய்மையினால்
அவனை அடைந்துவிடலாம் என்று தப்புக் கணக்கு
போடுகிறது தற்புகழ்ச்சி பேசி தலைக்கனம் கொண்டு
தறுதலைகளைப் போல் தரணியில்
சுற்றித் திரியும் கூட்டம்.

அன்புதான் இறைவன் என்பதை உணராது
சுயநலத்தில் சிக்குண்டு பிறரின் நிலை கண்டு
ஏசித் திரிந்து ,சினந்து, துன்பம் இழைப்பதில்
இன்பம் கொண்டு இழிவான வாழ்க்கை
வாழுகிறார்  பெரும்பாலான மூடர்கள்.

சென்ற ஒவ்வொரு கணமும் எக்காலமும்
திரும்பி வரப்போவதில்லை.

இருக்கின்ற ஒவ்வொரு கணத்தையும்
தில்லை நாதனின் புகழ் பாடுவோம்.

திருவேங்கட நாதனின் திருவடிகளைப்
பற்றி சிந்திப்போம்.

உள்ளத்தில் குடி கொண்ட குகனின்
வடிவை நினைப்போம்.

நம்மையெல்லாம் படைத்தும் இயக்கும் அம்பிகையையும்,
நன்றாக வாழ்ந்து நல்லறம் செய்ய உதவும் அஷ்ட லக்ஷ்மீகளையும்
நாராயணனின் நாமம் நாவில் எப்போதும் நிலைத்திட
செய்யும் நாமகளையும். நாம் வாயார பாடுவோம்.

வேத வித்துக்களே ஓத இயலும் வேதத்தின் சாரத்தை
இனிமையான தமிழில் வடித்துத் தந்து நம்மையெல்லாம்
நாரணன் புகழ் பாடி நற்கதியை அடைய வழிகாட்டிய
ஆண்டாளின் திருப்பாவையை ஓதுவோம்.

ஓங்காரப் பொருளை உணர்ந்து நிலையான பதத்தை
பெற்று மகிழ்வோமாக

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

வியாழன், 11 டிசம்பர், 2014

பகவத் கீதையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும்?(1 )

பகவத் கீதையின் கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும்?(1)

பகவத் கீதை இந்துக் கடவுளால் சொல்லப்பட்டதால் மற்ற மதத்தினர்கள் அதை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள்.

உண்மையில் மகாபாரதத்தில் வரும் அர்சுனன் கதாபாத்திரம் ஒரு சராசரி மனிதனின் குழப்பங்களைப் பற்றியது

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அதை அவர்கள் விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்த வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்த தவறும்போதோ அல்லது தயங்கும்போதோ பிரச்சினை ஏற்ப்படுகிறது.

அது வீட்டிற்குள் என்றால் அது அந்த குடும்பத்தை பாதிக்கிறது

அதுவே ஒரு நாட்டின் தலைவனாக இருந்தால் அது நாட்டை பாதிக்கிறது.

இந்த மாதிரி குழப்பமான சூழ்நிலைகளில் இருந்து
எப்படி மீண்டு வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்பதையே கீதையின் இரண்டாம்  அத்தியாயத்தில் பகவான் கண்ணன் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

இதற்க்குபோய் மத சாயம் பூசுவது ,வள்ளுவரின் குறளான எப்பொருள் யார் யார் வாய்க்  கேட்பினும்    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கு முரணாகிறது. (இன்னும் வரும்)

புதன், 10 டிசம்பர், 2014

பாரதி கண்ட கனவு ?

பாரதி கண்ட கனவு ?




இன்று பாரதி பிறந்த தினம்

உலகம் கொண்டாடுகிறது
வழக்கம்போல் அவன் சிலைக்கு மாலை மரியாதை.

நாளை மற்றொருவரின் பிறந்த தினம்
அதே சடங்குகள் இதுதான் இன்றைய உலகம்.

அவன் பலவற்றை சொன்னான் சில நடந்தது
அவன் தமிழ் சமுதாயத்தில் வெளிச்சத்திற்கு
கொண்டு வந்த அவலங்கள்
அப்படியேதான் இருக்கின்றன.

பெண்ணடிமை கூடாதென்றான்.
வீட்டை விட்டு வெளியே வந்த பெண்களின்
நிலை என் வீட்டை விட்டு வெளியே வந்தோம் என்ற நிலைக்கு
இன்றைய நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு குழந்தையாய்  இருக்கும் போதும்
பாதுகாப்பில்லை. கல்வி சாலைக்கு சென்றாலும்
அங்கிருக்கும் ஆ(சிறியர்கள் )சிரியர்கள் சிலர்
செய்யும் கொடூரத்திற்கு எல்லையில்லை.

படித்து வேலைக்கு சென்றாலும் அங்கும் சரி
பணி முடிந்து இல்லம் திரும்பும்போதும் சரி
என்ன நேரும் என்று யாருக்கும் தெரியாது.

ஊடகங்களில்  எப்போதும் காம களியாட்டக் காட்சிகள்தான்.
அதை சிலர் தங்கள் நிஜ வாழ்வில் அரங்கேற்றும்போதுதான்
அது கண்டிக்கப்படும் காட்சியாக மாறிவிடுகிறது.

சமூகத்தில் ஒழுக்கம் போய்விட்டது.
ஒழுங்கும் போய்விட்டது.

தனி மனிதன் திருந்தவேண்டும்.
அப்போதுதான் இந்த சமூகமும்
திருந்தும்.

உள்ளத்தில் வக்கிரங்களை சுமந்து கொண்டு உதட்டிலே
பெண்களுக்கெதிரான  வன்முறைகளை பழிக்கும் மனிதர்கள்
அந்த செயலை செய்யும்.  ஒரு சிலரை விட மிகவும் ஆபத்தானவர்கள்.

அவர்களிடம் பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வள்ளுவன் சொன்னதுபோல் ஒரு பெண் தன்னை அவள்தான்  காத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவள் இந்த உலகையும்
காக்க முடியும். ஏனெனில் அவள்தான் தாயாகிறாள்.இந்த உலகத்திற்கும் அவள்தான் பராசக்தி என்னும் தாயாவாள்.




மத மாற்றத்தால் என்ன பயன்?

மத மாற்றத்தால் என்ன பயன்? 

உலகில் பல மதங்கள் உள்ளன.


தரணியில் தன்னைப் படைத்தவன்
ஒருவன் இருக்கின்றான் அவனை
உணர்ந்துகொண்டு உய்ய வேண்டும் என்பதற்காக
பல தீர்க்கதரிசிகளால் அந்தந்த  கால் நிலைக்கேற்ப
வடிவமைக்கப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டன.

மனிதர்கள் தனியாக வாழாமல் ஒரு கூட்டமாக
சேர்ந்து வந்தால் ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த நிலையில் மதம் அவர்களுக்கு இணைக்கும் பாலமாக அமைந்தது.

ஆனால்  அதுவே காலபோக்கில் ஒரு கூட்டம் மற்ற மதத்தை
பின்பற்றியவர்களை தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கும், எதிர்ப்பவர்களை அழித்து ஒழிக்கும் ஆதிக்க மனப்பான்மையை  வளர்த்து இன்று இந்த உலகம் மத வெறியர்களின் கையில் சிக்கிசின்னா பின்னமாகி  கொண்டிருக்கிறது.

அதனால் இன்று உலக அமைதி கேள்விக்குறியாகிவிட்டது.
பண்பும், அன்பும் ,மற்றவரோடுஇசைந்து  வாழும் இனிய குணமும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலிருந்தும்  எங்கோ போய்விட்டது.

மத மாற்றங்கள் எந்த பயனையும் விளைவிப்பதில்லை.
அது மனிதர்களை ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள்  சிக்க வைத்து விடுகிறது

உடைகளை மாற்றிக்கொண்டாலும், புற சின்னங்களை மாற்றிக்கொள்வதாலும் பலன் ஏதும் விளையப்போவதில்லை.

எந்த மதத்தை சார்ந்தவர் எனினும் எல்லோருக்கும் ஒரே இறைவன் ஒன்றே என்ற சீரடி சாயி பாபாவின் கொள்கை ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்தால்தான் வேற்றுமை எண்ணங்கள் ஒழியும்.மற்ற மதத்தினரை வெறுப்புடன் பார்க்கும் எண்ணம் விலகும்.

அதிலிருந்து அவர்கள் வெளி வருவது மிகவும் கடினம்

நம்மைப் படைத்த இறைவன்தான் தீய எண்ணம் கொண்டவர்களின் இதயத்தில் அன்பை விதைக்க வேண்டும். இல்லாவிடில் மனித குலத்தின்
துன்பங்களுக்கு தீர்வு இல்லை.

சனி, 6 டிசம்பர், 2014

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.



மாலையில் இருள் சூழ்ந்தால்
காலையில் கதிரவன் உதயமாகின்றான்
அதை விரட்டிட அனுதினமும்

ஆனால் மனிதர்களின் மனதில்
இருள்  சூழ்ந்தால் அதை
விரட்டுபவர் யார்?

மனதில் சூழ்ந்துவிட்ட இருளை
விரட்ட மாகேசன் ஒருவனைத் தவிர
வேறு யாரால் இயலும்?

இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள்
காட்டிய வழி ஒளியாய்  விளங்கும்
இறைவனை தரிசித்து வழிபடுவதே

மதங்கள் பலவாயினும் மனிதர்கள்
அனைவருக்கும் ஒளி   ஒன்றே
இந்த உண்மையை  உணர்ந்தோர்
இன்பம் அடைவார்.

 மற்றோர் தானும் துன்பத்திற்கு  ஆளாகி
 இந்த உலகத்தின் அமைதியையும் குலைக்கின்றார்.

அனல் கொதிக்கும் மனமுடையோர் நெஞ்சில்
அன்பு புனல் பாயட்டும் இந்நாளில் அனைத்து
உலக மாந்தரும் அமைதி பெற.

கார்த்திகை தீப நன்னாளில் தீபம் ஏற்றி
வழிபாடு செய்து புறத்தே காணும் ஒளியை
நம் அகத்தே கண்டு ஆனந்தம் பெறுவோம்.