வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எலிகளும் நாய்களும்

எலிகளும் நாய்களும் 
மக்களை அச்சுறுத்தும் ஜந்துக்கள் உலகில் கணக்கற்றவை 
அவைகளை மனிதன் கொன்று குவிக்க ஆயுதங்கள், 
பொறிகள், நஞ்சுகள் என புதிது புதிதாக 
கண்டுபிடித்து அழிக்க நினைத்தாலும் அவைகள் 
அவனை பழி வாங்குவதற்கு அஞ்சுவதில்லை.
அவைகளை அழிக்க அழிக்க அதிக அளவில் தோன்றி 
மனிதனை சத்தமில்லாமல் பழி வாங்கி 
அவனின் மன நிம்மதியை குலைக்கின்றன. 

பல நேரங்களில் அவன் உடலில்
தீரா வியாதிகளை உருவாக்கி 
அவன் உயிரை பறிக்கும் கொடிய செயலையும்
வெற்றிகரமாக அவைகள் நிறைவேற்றிவருகின்றன 
நம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் எலிகள் மற்றும்
நாய்களின் ஜம்பம்,சீன,தைவான்,வியட்நாம் நாட்டு ,
மக்களிடம் மட்டும் போணியாவதில்லை'
அவர்கள் உயிருக்கும் ஏதும் பங்கம்  விளைவதில்லை 

அவர்கள் அவைகளை கொன்று,வறுத்து,சுட்டு,
வேகவைத்து ,சூப் வைத்து சுவைத்து 
தின்று இன்புறுகிறார்கள்

நமக்கு அவைகள் துன்பம் விளைவிக்காதவரை 
எலி விநாயக பெருமானின் வாகனமாகவும் 
நாய்கள் பைரவரின் வாகனமாகவும், 
தத்தாத்ரேயருடன் இருக்கும் நாய்கள் 
ரூபத்தில் இருக்கும் வேதங்களாகவும்
போற்றி வணங்குவோம். 

எலிகளையும் நாய்களையும் பிடித்து விருப்பமோடு 
தின்னும் நாட்டு மக்களுக்கு அனுப்பி வைத்தால்
நம் பிரச்சினையும் தீரும் அந்நிய செலவாணியும் கிடைக்கும்
ஆனால் அதற்க்கு நம் மத செண்டிமெண்ட் இடம் கொடுக்காது
ப்ளூ கிராஸ் அதற்க்கு அனுமதிக்காது .  

ஆனால் எலி வெளியிடும் சிறுநீர் 
நம் உடலில் சென்றுவிட்டால் 
ச்டேப்ரோபிரோசிஸ் என்ற கொடிய நோயை
உருவாக்கி மனிதனின் உயிரை கொல்வதுடன்  
அவன் வங்கி கணக்கில் பல லட்சங்களையும்
காலி செய்து விடுகிறது 

எலியை கொல்வதற்கு வீட்டில் வாங்கி வைக்கும் விஷம் 
வீட்டில் உள்ள கோழைகள் தற்கொலை செய்வதற்குதான்
பெரிதும் பயன்படுகிறது 

தெருவில் வாகனங்களில் அடிபட்டு செத்த
எலிகளை காகங்கள் பொதுநல உணர்வோடு
எடுத்து சென்று பாதி உண்கிறது.
மீதியை எங்காவது போட்டுவிட்டு 
அதன் கடமையைமுடித்து கொள்ளுகிறது. 

பூனைகள் எலி பிடிக்கும் என்றாலும் இன்று
நம் நாட்டில் உலவும் உருவத்தில் பெரிய 
பெருச்சாளிகளை கண்டு அவைகள் 
அஞ்சி ஓடும் நிலை இருக்கிறது.

நம் நாட்டில் இதுதவிர ஊழல் பெருச்சாளிகள்
என்று ஒரு இனம் கோடிகணக்கில் பெருகி 
இன்று நம் நாட்டின் வளத்தையே தின்று 
கொழுத்து கொண்டிருக்கிறது 
அதை எதிர்ப்பவர்கள் படும் பாடு 
பாடையில் போவதுதான் 
அதேபோல்தான் நாய்கள் கடித்தால்
ராபீஸ் நோய் கண்டு மரணம் சம்பவிக்கிறது 

அதுசரி எலிகளும், நாய்களும் இன்று 
அதிக அளவில் பெருக காரணம் என்ன?
அதற்க்கு யார் காரணம்?

காரணம் சொல்ல தேவையில்லை 
பொறுப்பற்ற மக்கள் தான் காரணம். 
என்று அனைவருக்கும் தெரியும். 
இருந்தாலும் மக்கள் என்றும் தங்கள்
தவறை ஏற்றுகொள்ளும் கலாசாரம்
நம்மிடையே கிடையாது.
செய்யும் தவறை எல்லாம் செய்துவிட்டு
பொது சொத்துக்களை கொளுத்தி 
வேலை நிறுத்தம் கடைஅடைப்பு போராட்டம் 
போன்ற வீர தீர செயல்களை நடத்தி 
நிர்வாகம் மீதும் ஆளும் அரசுகள் மீதும் 
பழி சுமத்தி போராட்டம் நடத்தும் வாய்ச்சொல் வீரர்கள்.

உணவு பொருட்களை கண்ட கண்
இடங்களில் வீசுவதும், சாக்கடைகளில்,
ஏரிகளில்,நீர்நிலைகளில்,
பயணம் செய்யும் பேருந்துகளில்,
ரயில் வண்டிகளில் கொட்டுவதும் ,
அன்னதானம் என்ற பெயரிலும், 
விருந்துகள் என்று விழாக்களில் 
உணவு பொருட்களை தயார் செய்து 
உண்டு மீந்ததையும், 
சமைத்து மீந்ததையும் 
சத்திர வாசல்கள்முன் 
மலைபோல் குவித்து 
எலிகளுக்கும், நாய்களுக்கும் 
இலவசமாக உணவளித்து 
{நம் தாய் திருநாட்டில் நாய்களோடு போட்டி போடும் 
மனிதர்களும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்)
அவைகள் கோடிகணக்கில் பெருகவிட்டுவிட்டு.  
அளவுக்குமேல் உண்ட மயக்கத்தில் 
என்ன செய்வதென்றரியாது   தமக்கு உணவளித்து
தங்கள் பசி தீர்த்த  மக்களுக்கு நன்றிகடனாக 
அனைத்து விதமான தொல்லைகளையும்,
துன்பங்களையும் தந்து மகிழ்கின்றன 

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் 
வரிகள் தங்களுக்குதான் என்று 
அவைகள் ஏற்றுக்கொண்டு பயமில்லாமல் 
எங்கு வேண்டுமானாலும் 
ஓடி விளையாடி கண்டதை எல்லாம் 
கடித்து குதறி திரிகின்றன 

மக்கள் திருந்த வேண்டும் 
இல்லையேல் துன்பம் தொடரும்.

1 கருத்து:

  1. நல்ல யோசனைகள்...

    எதனால் இவை பெருகுகின்றன என்பதை விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு